ஜப்பானிய காடை வளர்ப்பு Japanese quail farming
ஜப்பானிய காடை வளர்ப்பு:
வீரிய ரக கோழி மற்றும் வாத்திற்கு அடுத்தபடியாக ஜப்பானிய காடை வளர்க்கப்பட்டு வருகிறது. இவை பெரும்பாலும் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகின்றன. மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம்.
ஜப்பானிய காடை வளர்ப்பின் நன்மைகள் :
ஜப்பானிய காடை வளர்ப்புக்கு அதிக அளவில் முதலீடு தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் இவை அனைத்து தட்பவெப்ப நிலையிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது.
ஜப்பானிய காடைகளுக்கு தடுப்பூசிகள் அதிகம் தேவைப்படாது. ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே பலன் கொடுக்கின்றன.
ஜப்பானிய காடை ஆறு வாரத்திற்கு அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கொள்ளும். அதன்படி தீவனச் செலவும் குறைவு.
காடை இறைச்சி அதிக அளவு புரதச்சத்தும், குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் கொண்டது. உண்பதற்கு சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
இறைச்சி :
காடையின் ருசிமிக்க இறைச்சி, மலிவு விலை மற்றும் அதிக புரதச்சத்து போன்ற காரணங்களால் ஓட்டல்கள் மற்றும் துரித உணவுக்கூடங்களில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.
இதனால் காடை வளர்ப்பு தொழிலுக்கு அதிக சிறப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலை சிறந்த முறையில் பயிற்சி பெற்ற பிறகு தொடங்கினால் லாபம் மட்டும் தான்.
தீவனம் :
ஜப்பானிய காடைகளுக்கு கோழித் தீவனத்தை தான் பயன்படுத்துகின்றனர். காடைகளுக்கு குஞ்சுப் பருவத்தில் வழங்கும் தீவனம் 26 – 28 சதவீதம் புரதம் நிறைந்ததாக இருக்க வேண்டும். இந்த வகைத் தீவனத்தை முதல் 6 வாரம் வரை கொடுக்கலாம்.